பேச்சு,பேட்டி,அறிக்கை
குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பேட்டி: தங்களுக்கு விருப்பமில்லாத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு உண்டு என, சுப்ரீம் கோர்ட், அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதேபோல், ஓட்டளிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம், நம் ஜனநாயக நடைமுறைக்கு, புதிய அடையாளம் கிடைக்கும். தேர்தலில், பண பலம் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்த முடியும்.
இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் பேச்சு: முன்பு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் நன்னெறி பாடங்கள் இடம் பெற்றன. காலப்போக்கில், ஆட்சியாளர்கள் அவற்றை படிப்படியாகக் குறைத்து விட்டதால், இளமைப் பருவத்தில், மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டிய நல்லொழுக்கச் சிந்தனை ஊக்குவிக்கப்படவில்லை; ஒழுக்க நெறிமுறையின்றி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேட்டி: வேட்பாளரை நிராகரிக்கும் வாக்காளரின் உரிமையை, சட்ட மேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதை ஆமோதிக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை, அரசியல் கட்சிகள், தேர்தலில் நிறுத்தாத நிலை ஏற்படும்.
இந்தியா–அமெரிக்கா இடையே, அணுசக்தி தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது குறித்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேட்டி: அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்பாக, ஓரிரு நாடுகள் மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அணுக்கொள்கைகள், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை. இதில் பாகுபாடு காட்டக்கூடாது. பாகிஸ்தானில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இதைப்போக்க, அணுமின் சக்தியும் தேவைப்படுகிறது.
அ.தி.மு.க., எம்.பி., பாலகங்கா பேச்சு: எல்லா தகுதிகளும் உள்ளவர் ஜெயலலிதா. காலம் கனிந்து வந்துள்ளது. அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்துக்காரர்கள், ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இம்முறை, பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தைக் கிழித்து, தூக்கி எறிய வேண்டும் என, ராகுல் சொல்கிறார். ஆனால், அவர் சொல்வது போல, அவசரச் சட்ட வரைவை தூக்கி எறிய தேவையில்லை; அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த கட்சியையும், தலைவர்களையும் தான் தூக்கியெறிய வேண்டும்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு: தலைவன் என்றால், தொலைநோக்கு பார்வை வேண்டும். முடங்கிக் கிடப்பவன் எல்லாம், தலைவனாக முடியாது. வாஜ்பாயின் சிந்தனை, தொலைநோக்கு பார்வை, வேகம் கொண்ட மோடி, பிரதமராக வேண்டும். கங்கை, கோதாவரி நதி நீர், கிருஷ்ணா வழியாக ஸ்ரீரங்கம் வரும் நாள், வெகு தொலைவில் இல்லை.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: மனித உரிமைகள் கோட்பாடு, ஐ.நா., சபையில் இன்றும் இருக்குமானால், ஈழத் தமிழர் படுகொலை நடத்திய இலங்கை அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு, ஐ.நா., சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை: தமிழகத்தில் உள்ள மீனவர்கள் பிரச்னைக்கு, காங்., அரசு தான் காரணம் என, மோடி கூறியுள்ளார். வாஜ்பாய் ஆட்சியில் தான், 136 படகுகள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அதில், 65 படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. மீதமுள்ள படகுகள் மற்றும் மீனவர்களை, அடுத்து வந்த, காங்., அரசு தான் மீட்டது என்ற வரலாற்று உண்மையை, மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: இதுவரை, தமிழக மீனவர்களை தாக்கியும், சுட்டுக் கொன்றும், கொடுமைப்படுத்தியும் வந்த இலங்கை கடற்படை, இப்போது, படகுகளை பறிக்கும் புதிய பாதகத்தை துவங்கி உள்ளது. மீனவர்களின் பிழைப்புக்கு தேவையான படகுகளை பறித்து, அவர்களை விடுதலை செய்வது, உயிரைப் பறித்து, நடைபிணமாக அனுப்புவதற்கு சமம்.
பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பேட்டி: எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றால், பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக மத்திய அமைச்சரவை கொண்டு வர முயலும் அவசர சட்டத்திற்கு, ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இது காங்., தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்பதையே காட்டுகிறது.
‘இப்போதைக்கு, அதாவது, லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, வெற்றி பெற்றால், கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரசுக்கு ஆதரவு தர முடிவு செய்வோம்’ என்பதை, மறைமுகமாக விளக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேட்டி: பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்த கருத்துக்கு, நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எடுத்தாலும் இப்போது அதைவெளியிட விரும்பவில்லை.
No comments:
Post a Comment